மலட்டுத்தன்மையை அதிகரிக்கச்செய்யும் வாழ்க்கைமுறை மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அது குறித்த சில தகவல்கள்



தன்னுடைய இனத்தைப் பெருக்கிகொள்வது என்பது மனிதனுடைய அடிப்படை உரிமையும், விருப்பமும் ஆகும். இருப்பினும் மக்கள்தொகையில் 1௦ - 15 % குழந்தை பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
திருமணமான ஒருவருடத்தில் எவ்விதமான கருத்தடைச் சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் உடலுறவு கொள்ள வேண்டும். தவறினால் இதுபோன்ற மலட்டுத்தன்மையை அடைய நேரிடும். கணவனிடமோ அல்லது மனைவியிடமோ அல்லது இருவரிடமோ பிரச்சினை தோன்றக் கூடும். சிலநேரங்களில் குழந்தை பெறமுடியாததற்கான காரணம் என்னவென்றே கண்டுபிடிக்க இயலாது. பெண்களில் இந்தப் பிரச்சினைக்கான காரணம், பாலிசிஸ்டிக் ஓவரீஸ் எனப்படும் சினைப்பைக்கட்டிகள், என்டோமெட்ரியாசிஸ் எனப்படும் கருப்பையின் உள்ளே காணப்படும் திசுக்களின் அடுக்கு வெளியே வளரும் ஒரு நிலை, கருப்பையில் ஏற்படும் முரண்பாடுகள், பிறப்புறுப்பு காசநோய், குழாய் அடைப்பு, குறைவான கருப்பை இருப்பு (decreased ovarian reserve) ஆகியவை ஆகும். ஆண்களுக்கு பல்வேறு காரணங்களினால் ஏற்படும் விந்தணு எண்ணிக்கை குறைபாடு. பாலியல் செயலிழப்பு ஆகியவை காரணமாகும்.
கணவன், மனைவி இருவரும், கருத்தரிப்பு மையத்திற்குச் சென்று மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். விரிவான குடும்ப வரலாறு மற்றும், மருத்துவத் தகவல்கள் இவர்களிடமிருந்து பெறப்பட்டு, மற்ற ஆரோக்கியப்பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பது உறுதிசெய்து கொள்ளப் படுகிறது. முழு உடற்பரிசோதனை மற்றும் இடுப்பு பரிசோதனையை மனைவி செய்து கொள்வதன் மூலம் மருத்துவர் வேறு சில மதிப்பீடுகள் செய்ய உதவுகிறது.
நவீன யுகத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இந்தச் சூழ்நிலையில், நாளுக்கு நாள் கருத்தரிப்பதை பாதிக்கக்கூடிய சில பொதுவான காரணிகளைப் பட்டியலிடுகிறேன். இவை, கணவன் மனைவி இருவரும் பெற்றோராவதற்கு தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ள உதவும்.
1. எடை, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து: பெண்கள் கருத்தரிப்பதற்கு அவர்களின் உடல் எடை ஒரு முக்கியக் காரணியாகிறது. உடல் எடையை அளவிடுவதற்கு பொதுவாக உடல் பருமன் குறியீட்டு எண் (BMI) பயன்படுகிறது. பொதுவான ஏற்புடைய உடற்பருமன் குறியீட்டு எண் 18.5 - 30 kg/m2. அளவுக்கு அதிகமான எடை, மற்றும் மிகவும் குறைவான எடை இரண்டுமே இயல்பான கருமுட்டை வெளிப்பாட்டை பாதிக்கிறது. கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும்போது எடுத்துக்கொள்ளும் மருந்துகளை உடம்பு ஏற்க மறுக்கிறது. கருத்தரிக்கும் வாய்ப்பு குறைகிறது. கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பேறுகாலச் சிக்கல்கள் அதிகரிக்கிறது. பிறக்கும் குழந்தையையும் பாதிக்கிறது.
2. புகை பிடித்தல்: புகை பிடிப்பதினால் ஏற்படும் தீமைகளை பல்வேறு ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. புகைபிடிப்பது ஆண், பெண் இருவரிடமும் இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது. புகைபிடிப்பவரின் விந்துவை ஆய்வு செய்தால், அதிக அளவிலான ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் ஒரு வகை சமநிலையின்மை, குறைந்த அளவிலான விந்து எண்ணிக்கை, வழக்கத்திற்கு மாறான கருத்தரிக்கும் தன்மை, பெண் கருத்தரிப்பதற்கான குறைவான வாய்ப்பு ஆகியவை புகைபிடிப்பதனால் ஏற்படும் தீய விளைவுகள் எனத் தெரிய வருகிறது. புகை பிடிப்பதனால் கருத்தரித்திருக்கும் சமயத்தில் பல சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
3.உணவுக் காரணிகள்:
  • ஃபோலிக் அமிலம் - கருத்தரிப்பதை எதிர்நோக்கியிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் முன்கூட்டியே ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். இது பிறவிக் குறைபாடுகளைப் போக்க உதவும்.
  • வைட்டமின் D - இனப்பெருக்கச் செயல்பாடுகளில் வைட்டமின் D முக்கியப்பங்கு வகிக்கிறது. எனவே கருத்தரிக்கும் முன்பாக வைட்டமின் D குறைபாடுகள் சரிசெய்யப்படவேண்டும்.
  • அயோடின் - அயோடின் குறைபாடுள்ள, கருத்தரிக்க இயலாத பெண்களுக்கு அயோடின் சப்ளிமென்ட் அவசியம் தேவை. குழந்தை பிறப்பிற்கு முன் கருத்தரிக்கும் பெண்ணிற்குத் தேவைப்படும் வைட்டமின்களில் அயோடினும் சேர்க்கப்படுகிறது.
  • காஃபின் - அனைத்து தரப்பு மக்களின் உணவு வகைகள் மற்றும் பானங்களில் பொதுவாக காஃபின் காணப்படுகிறது. அதிக அளவில் காஃபின் நிறைந்துள்ள உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. எனவே ஒரு நாளைக்கு 2 கோப்பைக்கும் குறைவாகவே காபி அருந்துவது சிறந்தது.
  • ஆல்கஹால் - வாரத்திற்கு 8 தடவைக்கும் அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வது கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருத்தரித்திருக்கும் சமயத்தில், ஆல்கஹால் உட்கொள்வது, குழந்தைக்கு பல்வேறு பிறவிக் குறைபாடுகளை உண்டாக்கும்.
  • ஆன்டிஆக்சிடன்ட்கள் (ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள்) - வணிக நோக்கில் பல்வேறு உணவுகள் மற்றும் பானங்கள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளையும், பழங்களையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். இரசாயன வெளிப்பாடுகளை உள்ளடக்கிய சாதகமற்ற, எதிர் விளைவுகளை உண்டாக்கக்கூடிய வாழ்க்கை முறைகளைத் தவிர்த்தல், ஆகியவை மலட்டுத்தன்மையுள்ள ஆண்களுக்கு ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் என்னும் சமநிலையின்மையைக் குறைக்கிறது.
4. தொழில் சார்ந்த அபாயங்கள் - தொழில் சார்ந்த அபாயங்களான ஈயக் குழம்பு, பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவையும் தம்பதியினர் கருத்தரிக்கும் திறனைக் குறைத்து விடுகின்றன.
5. மன அழுத்தம் - மன அழுத்தம் இருப்பின் அது கருத்தரித்தல் தொடர்பாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. தகுந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் வாழ்க்கை முறையில் சில சரிக்கட்டல்கள், மாற்றங்கள் ஆகியவை இவ்வகை பாதிப்புகளைச் சீர்படுத்தும்.
6. பால்வினை நோய்கள் (STDs) - பிறப்புறுப்பு நோய்த்தொற்றுக்களுக்கு எதிராக உண்டாகும் பல்வேறு நோயெதிர்ப்பு மற்றும் அழற்சி நோய் எதிர் விளைவுகள் கருத்தரிக்கும் தன்மையைக் குறைக்கும். எனவே தம்பதியினர் பிறப்புறுப்புப் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
7. தடுப்பூசி போடுதல் - கருத்தரிக்கும் முன்பாகவே சில தடுப்பூசிகளை போட்டு முடித்திருக்க வேண்டும். ரூபெல்லா, இன்ஃப்லூயன்சா, வாரிசெல்லா - சோஸ்டர் போன்றவை. கருவுற்றிருக்கும்போது இவ்வகைத் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் அபாயகரமானவை.
எனவே கருவுறுவதற்கு முன்பான கவனிப்பும், அக்கறையும் கருவுறும் திறனை மேம்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் அதிகம் செய்யப்படவேண்டும். இத்தகைய கவனிப்பின் மூலம் இயற்கையாக கருத்தரித்தாலும் சரி, கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டு கருத்தரித்தாலும் சரி, பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு பெண் மற்றும் அவளது கணவரின் கருத்தரித்தல் சார்ந்த உடல் ஆரோக்கியமே, அவர்களது குழந்தைகளின் உடல் நலம் மற்றும் நல வாழ்வைத் தீர்மானிக்கும் மிகச் சிறந்த காரணியாக, தீர்வாக அமையும்!!

Comments